Thursday, September 27, 2012

சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்!


இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.

பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.

ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.

மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :

உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.

முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.

அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)

சில இறுமாப்புக் கொண்டவர்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம். முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.


ஒவ்வொரு சமுதாயத்திலும் சில ‘தறுதலைகள்’ இருப்பது போல் முஸ்லிம் சமுதாயத்திலும் சில தறுதலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அறிவிழந்த தறுதலைகள் செய்யும் தவறை அந்த ஒட்டு மொத்த சமுதாயத் தவறாக வர்ணிப்பது, புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது.

முஸ்லிம்களில் சிலர் செய்யும் வன்முறைச் செயல்களை “இஸ்லாமிய வன்முறை, தீவிரவாதம்” என்று மத முத்திரை குத்துவதும் வன்முறைச் செயல்களை வெறுக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை துன்பத்திற்குள்ளாக்குவது. எரியும் புண் காக்கையறியாது, என்பார்களே அதை ஒத்திருக்கிறது.இஸ்லாம் ‘தீவிரவாதத்தை” ஆதாரிக்கிறதா..? என்பதைப் பார்ப்பதற்கு முன்..

மத ஆய்வு மனிதனுக்கு அவசியம். ஆய்வின் விமர்சனத்துக்கு அந்த மத ஆதார நூல்களே உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம். எம்மத விமர்சனமும் அம் மதம் போதிக்கும் நூலை நேரடியாக விளங்கி விமர்சிக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு ஒரு மதத்தை விமர்சிப்பது அறிவுடைமையல்ல! என்பதை மனதில் பதித்துக் கொண்டு தொடர்வோம்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் விரும்புகிறது. என்பதை கீழ்காணும் வசனத்தில் விளங்கலாம்.
”நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்”.. (அல்குர்ஆன் 5:32)

இந்த வசனத்தை ஒரு முறைக்குப் பலமுறைப் படித்துப் பாருங்கள். எந்த விளக்கவுரையும் தேவையில்லாத அளவிற்குத் தெளிவாக – வெளிப்படையாகவே மனிதநேயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. தீவிரம் – வன்முறை செயல்களுக்கு சாவு மணி அடிக்கிறது. 

தனியொரு மனிதனை எவன் கொன்றானோ அவன் முழு மனித இனத்தையே கொலை செய்து விட்டான் – அதாவது மனிதத்தையே அழித்து விட்டான். அவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன் என்று ஒதுக்கி விடுகிறது.
எவனொருவன் தனி மனிதனை வாழ வைக்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான் அதாவது மனித இனத்தை – மனிதத்தைக் காப்பாற்றி விட்டான். இதைத்தான் இஸ்லாம் வரவேற்கிறது. இந்த வசனம் நேரடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் பேசுகிறது. விசுவாசம் கொண்டவர்கள், விசுவாசம் கொள்ளாதவர்கள் என பிரித்துச் சொல்லவில்லை.

ஒரு மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டவனாகவோ, காயம் பட்டவனாகவோ இருக்கலாம். அவன் எந்த நாட்டை, அல்லது எந்த இனத்தை, அல்லது எந்த நிறத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல. அவனுக்கு உங்களது உதவித் தேவைப்படுகிறது என்று நீங்கள் அறிந்தால், அப்பொழுது அவனது நோய்க்கோ, காயங்களுக்கோ சிகிட்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது உங்கள் மீது கடமையாகும்.அவன் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தால், அப்பொழுது அவனுக்கு உணவு வழங்கி அவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது உங்கள் கடமையாகும். அவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தாலோ, உயிர் போகும் ஆபத்தில் சிக்கியிருந்தாலோ அந்த ஆபத்துகளிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உங்கள் மீது கடமையாகும்.

இப்போது சொல்லுங்கள், ‘ஜிஹாத்’(?) என்ற பெயரால் வன்முறைகளில் ஈடுபட்டு மனிதக் கொலைகள் புரியும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? வன்முறைச் செயல்களால் தனக்கு அறிமுகமே இல்லாத மனித உயிர்களைப் படுகொலை செய்பவன் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?
கொலைக்குப் பதிலாக கொலையாளியின் உயிரைப் பறிப்பதாக இருந்தாலும் சரி. அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்கான தண்டனையாக இருந்தாலும் சரி, அதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றம்தான் இதைப் பற்றிக் கட்டளையிட வேண்டும். இந்த உரிமை தனிப்பட்ட மனிதனுக்கு வழங்கப்படவில்லை.

இது போல் பிற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால் அதை முடிவு செய்யும் உரிமை முறையாக அமைக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. பூமியில் குழப்பங்களுக்கு காரணமாக இருந்ததற்காக ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையும், அதிகாரமும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன், உயிரைப் பறித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் சுமத்துப்பட்டுள்ள கடமையாகும்.

யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும். இதே கட்டளை அல்குர்ஆனின் வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லப்படுகிறது. ”அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்” (அல்குர்ஆன் 6:151)

”இணைவைத்தலுக்கு அடுத்தபடியான மிகப் பெரும் குற்றம் மனித கொலையாகும்” என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அடுத்து மனிதனின் நீதி பெறும் உரிமையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். இந்த உரிமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். இம்மாபெரும் உரிமையை மனிதனுக்கு ‘மனிதன்’ என்ற அந்தஸ்திலேயே இஸ்லாம் வழங்குகிறது.

”ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம்”.

”நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. (அல்குர்ஆன் 5:2)

ஓ நம்பிக்கையாளர்களே!… ”எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்”. (அல்குர்ஆன் 5:8)

ஓ நம்பிக்கையாளர்களே! ”நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்”. (அல்குர்ஆன் 4:135)

இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ”வழிகாட்டல்களை” எழுதிக் கொண்டே இருக்கலாம்.

சில அறிவிலி முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாத்தை மதிப்பீடு செய்வது அறிவு சார்ந்த வாதமல்ல. இஸ்லாம் என்பது ‘வழிகாட்டல்’ மாத்திரமே. அதைப் பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. பின்பற்றாதது முஸலிம்களின் தவறே தவிர இஸ்லாத்தின் குற்றமாகாது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF